பள்ளி மேல் கூரை இடிந்து மாணவி பலி
புதுக்கோட்டை:பள்ளிக்கூட மேற் கூரை இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. 3 மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளிக்கூடத்தில் 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
தற்போது 10, 12ம் வகுப்புக்கு செல்வோருக்காக சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று மாலை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவிகள் வீடுகளுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது பள்ளிக் கட்டடத்தின் மேற் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் மாணவ, மாணவிகள் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக சக மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து அவர்களை மீட்டனர். அதில் சுபாஷினி என்கிற 12ம் வகுப்புக்கு செல்லும் மாணவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் மத்திய அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் சென்று பார்வையிட்டனர்.