மக்களுக்காக குரல் கொடுப்பேன் - கனிமொழி
சென்னை:இதுவரை வெளியில் பேசி வந்த மக்கள் பிரச்சினைகளை இனி மக்கள் மன்றத்தில் (ராஜ்யசபாவில்) எடுத்து வைப்பேன், மக்களுக்காக குரல் கொடுப்பேன் என்று கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே, ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அவர் தனது தாயார் ராஜாத்தியம்மாளுடன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சரும், கனிமொழியின் அண்ணனுமான மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.
பின்னர் கோபாலபுரத்திற்குச் சென்ற கனிமொழி அங்கு முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும் குடும்பத்தினரையும் சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து கனிமொழியிடம் கேட்டபோது,
என் மீது கட்சியும், தலைவர்களும் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
என் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்குப் பாதகம் வராத அளவுக்கு செயல்படுவேன். இதுவரை மக்கள் பிரச்சினைகள் குறித்து வெளியில் பேசி வந்தேன். இனிமேல் நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும். மக்களுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன் என்றார் கனிமொழி.
எம்.ஏ படித்துள்ள கனிமொழி சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று வந்தார். அவரும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் இணைந்து கருத்து என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு பொதுப் பிரச்சினைகள் குறித்து மக்கள் அரங்கில் விவாதித்து வந்தனர்.
கருத்து அமைப்பின் மூலம் பொது வாழ்க்கையில் தீவிரமாக அடியெடுத்து வைத்த கனிமொழி சமீபத்தில் சென்னையில் சங்கமம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி அனைவரையும் கவர்ந்தார்.
கருணாநிதி குடும்பத்திலிருந்து அரசியலுக்கு அடுத்த வாரிசாக கனிமொழி இழுத்து வரப்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு பக்கம் இருந்தபோதிலும், கனிமொழியின் பொது வாழ்க்கை படு வேகமாக பிரகாசிக்கத் தொடங்கியது. தற்போது எம்.பி. சீட் அவருக்கு தரப்பட்டுள்ளது.
ராஜ்யசபா தேர்தலுக்குப் பிறகு கனிமொழி மத்திய அமைச்சராக்கப்படலாம், தயாநிதி மாறன் வகித்து வந்த தொலைத் தொடர்புத் துறை கனிமொழிக்கு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
கனிமொழிக்கு கணவர், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். நல்ல கவிஞராக அறியப்பட்ட கனிமொழி பொது பிரச்சினைகளில் தீவிர அக்கைற காட்டுபவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் செல்போன்களுக்குத் தடை விதிக்கப்பட்டது, ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை பகிரங்கமாக, கடுமையாக எதிர்த்தவர்.
சீரிய சிந்தனையும், ஆழ்ந்த அறிவும், தமிழ்ப் புலமையும் மிக்க கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது, பொதுப் பிரச்சினைகள் குறித்து இன்னும் உரத்து குரல் கொடுக்க அவருக்கு உதவும் என்று கூறலாம்.












Click it and Unblock the Notifications