கனிமொழியை அமைச்சராக்கசங்கப் பலகையில் இடமில்லை: கருணாநிதி
சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக உள்ளனர். கனிமொழியையும் அதில் சேர்க்க சங்கப் பலகையில் இடமில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்,
கனிமொழி மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதா?
மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஏற்கனவே 13 பேர் இருக்கிறார்கள். இதற்கு மேல் சங்கப்பலகை இடம் தராது.
கனிமொழி அரசியலுக்கு வர காரணம் என்ன?
அரசியலுக்கு வந்தது தான் காரணம்.
மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டீர்கள். மதுரை மேற்கு தொகுதி இடைதேர்தல் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார்?
அது காங்கிரஸ் கட்சியின் இடம்.
தயாநிதி மாறனுடன் மீண்டும் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?
அதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார் கருணாநிதி.
கூட்டணி ஆதரவோடு முயற்சி செய்தால் இன்னொரு இடம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறதே என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில்,
ஒரு வாரத்திற்கு முன்பே இதுகுறித்து நான் கூறினேன்.
போட்டி போட்டு, இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களை அங்கே இழுப்பது. அங்கே உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை இங்கே இழுப்பது போன்ற குதிரை பேரத்திற்கு இடம் இல்லாமல் சுமூகமான முறையில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவிற்கு 2 இடம், பிரதான எதிர்கட்சிக்கு 2 இடம், தோழமை கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒன்று என்ற முறையில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியும், பரபரப்பும் இல்லாத ஒரு தேர்தலை நடத்துவதையே நான் விரும்புகிறேன் என்றார்.
மாநிலங்களவை தேர்தல் அதிகாரியாக செல்வராஜ் அறிவிக்கப்பட்டு தற்போது அவரை மாற்றி விட்டு நரேஷ்குப்தாவை போட்டிருப்பது குறித்து கேட்டபோது, அதற்கு ஏதாவது டெக்னிக்கல் காரணமா, லீகல் காரணமா, அரசியல் காரணமா என தெரியவில்லை என்றார் முதல்வர்.
தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்ட விவகாரம் உங்களை எந்த அளவுக்குப் பாதித்தது என்று கேட்டபோது,
இதுபோல ஒரு பொது நிருபர்கள் கூட்டத்தில் நீங்கள் எல்லாம் கேள்வி கேட்கின்ற அளவிற்கு பாதித்தது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications