ஊட்டியில் தொடரும் குபு குபு வெண்புகை:எரிமலையா என மக்கள் பீதி
ஊட்டி: ஊட்டி அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து வெண்புகை வருவது 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் அப்பகுதியில் எரிமலை இருக்குமோ என்று மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத் தலைநகர் ஊட்டிக்கு அருகே தலைகுந்தா என்ற பகுதியில் உள்ள வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கற்பூர மரங்கள் உள்ளன.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென அங்கு பெரும் பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து குபுகுபுவென வெண் புகை வரத் தொடங்கியது.
வெண் புகையுடன் தீ ஜுவாலையும் வரத் தொடங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். இந்த தீ மற்றும் வெண் புகையில் சிக்கி கற்பூர மரங்கள் தீயில் கருகி சாம்பலாயின.
இந்தப் புகையை சுவாசித்தவர்களுக்கு மயக்கமும், வாந்தியும் ஏற்பட்டது. வெண் புகை வருவதைப் பார்க்க அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் குவிந்தனர். ஆனால் அவர்களை அப்பகுதிக்கு அருகே செல்லாமல் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.
இந்த வெண் புகை குறித்து பூகோளவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பூகோளவியல் துறை உதவி இயக்குனர் பாலசுப்ரமணியம் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் புதையுண்ட மரங்கள் மற்றும் இலை தழைகள் மக்கி போனதால் பூமிக்கடியில் மீத்தேன் வாயு உற்பத்தியாகியுள்ளது. இடி, காட்டுத் தீ போன்ற இயற்கை சீற்றங்களால், அந்த வெப்பத்துடன் மீத்தேன் வாயு பூமியை பிளந்து வெளியேறி வரும்.
அதுபோல் தான் இங்கு நிகழ்ந்திருக்கிறது. எரிமலையோ, நிலநடுக்கமோ ஏற்பட வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் வந்த சமயத்தில் பலத்த மழை பெய்ததும், புகை அதிகரித்து 60 அடி உயரத்திற்கு சூழ்ந்து கொண்டது. இதனால் நிபுணர்களுக்கும் அவர்களுடன் இருந்தவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது.
இன்று 2வது நாளாக வெண் புகை வருவது நீடிக்கிறது. இதனால் மக்களிடையே எரிமலை இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ்மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமியில் ஏற்படும் சில மாற்றங்களால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பூகம்பமோ அல்லது எரிமலையோ ஏற்பட வாய்ப்பில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications