வாரிசைத் தேர்ந்தெடுக்க மன்னர் ஆட்சியாநடக்கிறது? கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்
சென்னை:கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்று கேட்க இங்கு என்ன மன்னராட்சியா நடக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா காட்டமாக கூறியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள வானகரத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன், கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியனின் மகள் பாரதி ஆகியோர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 6 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 6 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை ஜெயலலிதா நடத்தி வைத்தார்.
திருமணத்தை நடத்தி வைத்த பின்னர் ஜெயலலிதா பேசுகையில்,
நல்ல தலைவர் என்பவர் தொண்டர்களுக்கு வழி காட்டியாகவும், தாய்ப்பாசத்துடனும் இருந்து கட்சியை நடத்திச் செல்ல வேண்டும்.
ஆனால் இன்று சிலர் நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல், நாற்காலியை பற்றி மட்டுமே கவலைப்படும் குடும்ப அரசியல் தலைவர்களாக உள்ளனர். தமிழ்நாட்டை சீர்குலைத்து, சின்னாபின்னமாக்கி, சட்டம் ஒழுங்கை சீரழித்து வருகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் முதல்வரே சட்டம் ஒழுங்கு சீரழிய காரணமாக வேதனை அளிக்கக் கூடியது. இதை எண்ணி ஒவ்வொரு நாளும் அவருக்காக ஓட்டு போட்ட மக்கள் வெட்கித் தலை குணிகிறார்கள்.
மதுரை வன்முறையில், 3 அப்பாவிகள் இறந்ததால், அவர்களின் குடும்பத்தினர் என்ன துயரப்பட்டிருப்பார்கள், எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.
அடுத்த வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்புக்கு என்ன அவசியம். வாரிசைத் தேர்ந்தெடுக்க இவர்கள் முகாலாய சாம்ராஜ்யத்தையா நடத்துகிறார்கள் அல்லது இவர்கள் என்ன இங்கிலாந்து மன்னர்களா. இப்போது மக்களாட்சி நடந்து வருவது இவர்களுக்குத் தெரியவில்லை.
ஒருவன், தனது தந்தையைக் கொன்று விட்டு நான் அனாதை ஆனேன் என்று கூறினானாம். அந்தக் கதையாக இது இருக்கிறது. தன் வினை தன்னைச் சுடும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கருணாநிதியை, தீய சக்தி என்றார் எம்.ஜி.ஆர். அந்த தீய சக்தி நடத்தும் ஆட்சியை, மக்கள் விரோத ஆட்சியை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள். இனி திமுகவுக்கும், கருணாநிதிக்கும் எதிர்காலம் இல்லை. அவர்களுக்கு இனி இலையுதிர்காலம்தான். நமக்குத்தான் வசந்த காலம் காத்திருக்கிறது என்றார் ஜெயலலிதா.