ராஜ்யசபா: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
சென்னை:ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று அதிமுக வேட்பாளர்கள் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் டாக்டர் மைத்ரேயன், ஆ. இளவரசன் ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரியான நரேஷ்குப்தாவிடம் இருவரும் தங்களது வேட்பு மனுக்களை வழங்கினர்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜூன் 5ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். 6ம் தேதி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 8ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். போட்டி இருந்தால் ஜூன் 15ம் தேதி காலை வாக்குப்பதிவு நடந்து மாலையில் முடிவு அறிவிக்கப்படும்.
இத்தேர்தலில் திமுக சார்பில் கவிஞர் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய செயலாளர் டி.ராஜா போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications