பட்ட நூல் கழுத்தை அறுத்து2 வயது சிறுவன் பரிதாப சாவு
சென்னை:சென்னையில் எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் நூல் கழுத்தை அறுத்ததில் 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து பட்டம் விடுவோருக்கு போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சரத் பாபு. ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது மகன் சஷாங்க் (2). ஞாயிற்றுக்கிழமை மாலை தனது மகனை மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் உட்கார வைத்துக் கொண்டு சென்றார் சரத்பாபு.
அயனாவரம் பகுதியில் கொன்னூர் நெடுஞ்சாலையில், தொற்றுநோய் மருத்துவமனை அருகே அவர் சென்றபோது எங்கிருந்தோ வந்த பட்டத்தின் நூல், சஷாங்க்கின் கழுத்தில் பட்டு அறுத்தது.
திடீர் என நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார் சரத்பாபு. ரத்த வெள்ளத்தில் மிதந்த சஷாங்க்கை உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள் சஷாங்க் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இச்சம்பவம் காரணமாக அயனாவரத்தைச் சேர்ந்த சிவில் என்ஜீனியரான நாராயண மூர்த்தி என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பட்டம் விடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பட்டம் விடுவோர், நூலின் வலுத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், சக பட்டம் விடுவோருக்கு டீல் விட நூலில் கண்ணாடித் துகள்களைப் பொடித்து மாஞ்சா எனும் பசையைத் தடவுகின்றனர்.
இப்படி மாஞ்சா தடவப்பட்ட நூல்கள் பெரும் ஆபத்தானவை. உயிரைப் பறித்து விடுபவை. இப்படிட்ட நூலில் சிக்கித்தான் சஷாங்க் இறந்துள்ளான். கடந்த 2001ம் ஆண்டிலும் இதுபோல மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் பட்ட நூல் கழுத்தை அறுத்து பரிதாபமாக இறந்தார்.
போலீஸ் எச்சரிக்கை
சஷாங்க் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் சில கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். மாஞ்சா தடவிய நூலினால் ஆன பட்டத்தை விடக் கூடாது. அப்படி விடுவோர் கைது செய்யப்படுவர். அவர்களுக்கு 3 மாத சிறைத் தண்டனை கிடைக்கும், அபராதமும் விதிக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications