ராஜஸ்தானில் பயங்கர வன்முறைபோலீஸ் துப்பாக்கி சூடு - 9 பேர் பலி
ஜெய்பூர்:இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் தங்களைச் சேர்க்க்க கோரி குஜ்ஜார் சமுதாய மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் கூட்டத்தைக் கலைக்க நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானார்கள். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பு நிலவுகிறது.
ராஜஸ்தானில் உள்ள குஜ்ஜார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று அவர்கள் ஜெய்ப்பூரில் போராட்டத்தில் குதித்தனர். 2000க்கும் மேற்பட்ட குஜ்ஜார் சமூகத்தினர் திரண்டு வந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. ஜெய்ப்பூர்-ஆக்ரா சாலையை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் குதித்தனர். இதில் 9 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வன்முறையில், ஏராளமான போலீஸாரும் காயமடைந்தனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள நான்கு முக்கிய நெடுஞ்சாலைகளிலும் 20 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை குறித்து உயர் அதிகாரிகளுடன் மாநில காவல்துறை அமைச்சர் கட்டாரியா ஆலோசனை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications