நதி நீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கபிரதமர் தலையிட கருணாநிதி கோரிக்கை
டெல்லி:பாலாறு, முல்லைப் பெரியாறு, காவிரி நீர்ப் பிரச்சினைகளில் சுமூகத் தீர்வு ஏற்பட பிரதமர் மன்மோகன் சிங் தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதியை நேற்று பகல் முழுவதும் பல்வேறு தலைவர்கள் சந்தித்தனர். பின்னர் பிற்பகலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் கருணாநிதி அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
இதையடுத்து இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து பிரதமருடன் கருணாநிதி முக்கியமாக விவாதித்தார்.
சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள், ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து பிரதமரிடம் ஆலோசித்தேன். இந்தத் திட்டங்களை விமான நிலைய ஆணைய குழுமமே நடத்த வேண்டும் என கோரினேன்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான நாடாளுமன்றக் குழுவினை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவரிடம் வலியுறுத்தினேன்.
சமீபத்தில் குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 12 பேர் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட மீனவர்கள் மீண்டு வந்து என்னை சந்தித்து தங்களது பிழைப்புக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரினர். அதுகுறித்தும் பிரதமரிடம் பேசினேன்.
இதற்காக செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்நாடு இல்லத்திற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் என்னை வந்து சந்தித்து விவாதிப்பார் என்று பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்குவது குறித்தும் பிரதமரிடம் ஆலோசித்தேன். ஏற்கனவே இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்ததாக உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு பிரதமர் தெரிவித்தார். அதன்படி செய்வோம்.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய நதி நீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட உதவுமாறும் பிரதமரிடம் கோரினேன். இந்தப் பிரச்சினைகளில் நீதிமன்றங்களின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் புறக்கணிக்கிற நிலை இனியும் தொடரக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
நதிகள் இணைப்பு குறித்தும் பிரதமரிடம் பேசினேன். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்பணிகளில் முன்னேற்ற நிலை நிலவுவதாகவும் பிரதமர் என்னிடம் தெரிவித்தார் என்றார் முதல்வர்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை. பேசிக் கொண்டிருக்கிறோம். ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பேசி முடிவெடுக்கவுள்ளோம்.
துணை குடியரசுத் தலைவர் பதவி வேண்டும் என்று திமுக சார்பில் வேண்டுகோள் எதுவும் வைக்கப்படவில்லை.
மத்திய அமைச்சரவையில் திமுகவினர் யாருக்கும் புதிதாக அமைச்சர் பதவி கேட்கப்பட மாட்டாது. தற்போதைய நிலையே நீடிக்கும்.
தயாநிதி மாறன் மீது நடவடிக்கை இருக்குமா என்பதை கட்சியின் பொதுச் செயலாளரிடம்தான் கேட்க வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications