ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?இன்னும் முடிவாகவில்லை - கருணாநிதி
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று இன்னும் பேச வேண்டியது உள்ளது, பேச்சுவார்த்தை தொடரும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
டெல்லியில் 2 நாள் பயணம் மேற்கொண்ட முதல்வர் கருணாநிதி நேற்று மாலை சென்னை திரும்பினார். முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தருவது என்பதில் திமுக இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அப்துல்காலமை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்வது குறித்து திமுகவின் நிலைப்பாட்டை கூறமுடியாது.
இது பஞ்சாயத்து தேர்தல் கிடையாது. ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். மீண்டும் ஜூன் முதல் வாரம் டெல்லி வருவேன். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து மேலும் பேச்சு நடத்தப்படும் என்றார் முதல்வர்.
பின்னர் நேற்று இரவு சென்னை திரும்பிய பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடந்த சந்திப்பின்போது சென்னை விமான நிலைய விரிவாக்கம், ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமைப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினருக்காக நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்குடன் பேசுகையில், செம்மொழி தமிழ் குறித்து பேசப்பட்டது. சென்னை மாநகரில் செம்மொழி தமிழுக்கென மத்திய நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய திட்டக் குழு கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
தொல்காப்பியர் பெயரிலும், திருவள்ளுவர் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
செம்மொழிக்கு சர்வதேச அளவில் 2வது விருது கொடுப்பதற்கான திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 5 இளம் தமிழ் அறிஞர்களுக்கு வட மொழி வல்லுனர்களுக்கு வழங்குவது போல விருதுகள் வழங்கப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.
செம்மொழியில் திறன் மிக்க 3 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு ஆயுட்கால சாதனையாளர்கள் என்ற நிலையில் இந்த விருதுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஆண்டுதோறும் வழங்குவது.
விலைவாசி உயர்வைக் குறைக்கத்தான் ரேஷன் கடைகளில் கிலோ அரிசி 2 ரூபாய்க்குத் தரப்படுகிறது. சிமென்ட் விலையைக் குறைக்க உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசுவோம்.
மது விலக்கை எல்லோரும் தீவிரமாக வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அரசு ரீதியாக அதை அமல்படுத்த முடியுமா என்பது மற்ற அரசுகள் நடத்தி ஏற்பட்ட விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும். மது விலக்கிலே டாக்டர் ராமதாஸின் கொள்கை புனிதமான கொள்கை. காந்தி போல சிந்திக்கிறார். ஆனால் நடைமுறையில், வெற்றி பெறுமா என்பது தான் கஷ்டமாக உள்ளது.
திமுகவிற்கு துணை ஜனாதிபதி பதவி கொடுப்பது குறிந்து நான் சேனியா காந்தி சந்திப்பின் போது கேட்கவில்லை. ஆனால் பத்திரிக்கைகள் பொய் செய்திகளை வெளியிட்டு தங்களை விளம்பர படுத்திக் கொண்டுள்ளனர். இதுதான் நான் டெல்லியில் தெரிந்து கொண்ட ரகசியம் என்றார் கருணாநிதி.