ஹெல்மெட் அணியாதவர்களிடம் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை
சென்னைஹெல்மெட் அணியமால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுனில்குமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 6 மாநகராட்சிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அரசு உத்தரவு ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த உத்தரவு அமலுக்கு வர இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் ஹெல்மெட் விற்பனை படு வேகமாக நடந்து வருகிறது.
இந் நிலையில் ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கினால், லஞ்சல் வாங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில் குமார் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,
நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம் அமலுக்கு வருகிறது. சென்னை முழுவதும் தினமும் 200 இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். யாராவது ஹெல்மெட் அணியாமல் வந்தால் அவர்களுக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்படும்.
முதல் தடவை ரூ. 100ம், அடுத்தடுத்து ஹெல்மெட் அணியாமல் சிக்கினால் ரூ. 300ம் அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் வருவபவர்களிடம் போலீஸார் அபராதம் மட்டுமே வசூலிக்க வேண்டும், லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களை தப்ப விட்டால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பர்கள். மேலும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சொல்லும் பெண்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.