வாட்ச்மேனை அடித்ததாக கொடநாடு பஞ்சாயத்துதலைவர் மீது போலீஸ் வழக்கு
கோத்தகிரி: சர்ச்சைக்குரிய கொடநாடு எஸ்டேட் காவலாளியை அடித்ததாக கொடநாடு பஞ்சாயத்துத் தலைவர் பொன்தோஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் 800 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த எஸ்டேட்டுக்குச் சென்ற ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் கிட்டத்தட்ட 1 மாதம் ஓய்வெடுத்தார். இந்த எஸ்டேட்டில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொடநாடு பஞ்சாயத்துத் தலைவர் பொன்தோஸ் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் பேரில் ஜெயலலிதா எஸ்டேட்டிற்குள் இருந்தபோது அதிகாரிகள் சோதனை நடத்த எஸ்டேட்டுக்கு வந்தனர். ஆனால் அவர்களை அதிமுகவினர் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில் ஜெயலலிதா எஸ்டேட்டை விட்டுச் சென்ற சில நாட்களில் போலீஸாருடன் அதிரடியாக அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனை போட்டனர்.
சோதனைக்குப் பின்னர் எஸ்டேட் வளாகத்திற்குள் 14,000 சதுர அடியில் அனுமதியின்றி பங்களா கட்டப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அரசு அதிகாரிகள் பங்களாவின் உட்புறத்திலும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தபோது அதற்கு தடை வாங்க எஸ்டேட் நிர்வாகிகள் தீவிரம் காட்டினர். இதனால் புகார் கொடுத்த பொன்தோஸுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட்டிற்குள் உள்ள அண்ணா நகர் என்ற இடத்திற்குச் செல்ல பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ், காமராஜ், தங்கவேல் ஆகியோர் சென்றபோது, எஸ்டேட் காவலாளி பாஸ் இருந்தால்தான் கேட்டைத் திறக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்தார் பொன்தோஸ். நான் யார் தெரியுமா என்று ஆவேசமாக கேட்டபடி, காவலாளியின் சட்டையை பிடித்து கீழே தள்ளிவிட்டார்.
அப்போது அங்கு வந்த எஸ்டேட் அதிகாரி ராதாகிருஷ்ணனிடமும் பொன்தோஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் மற்றும் மேலாளர் ரவிச்சந்திரன், உதவி மேலாளர் பாபு ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில், பொன்தோஸ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications