மதுரை மேற்கு தொகுதி: நாளையுடன் மனு தாக்கல் ஓய்கிறது
மதுரை:மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
இத் தொகுதியில் வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதுவரை 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தேமுதிக வேட்பாளர் சிவமுத்துகுமார், பாஜக வேட்பாளர் சசிராமன் ஆகியோர் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு மனு தாக்கல் செய்துவிட்டார்.
திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது ெதாடர்பாக கட்சிக்குள் பெரும் பூசல் நடந்து கொண்டுள்ளது. மேலிட பார்வையாளர் வீரப்ப மொய்லி அனைத்து கோஷ்டினருடனும் பேசிவிட்டு இப்போது டெல்லியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தலுக்கு 19 நாட்கள் உள்ளநிலையில் இந்த தொகுதியில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக 18ம் தேதி மத்திய அதிரடிப்படையினர் 6 கம்பெனிகள் மதுரைக்கு வருகின்றன.
216 வாக்குச் சாவடிகளில் 65 பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு அங்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது. மற்ற வாக்கு சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
தேர்தல் பணிக்காக தமிழக ஆயுதப்படை போலீஸார் 2,500 பேர், சிறப்பு காவல்படை போலீஸார் 3,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முன்னெச்சரி நடவடிக்கையாக 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் குற்றவாளிகள், தலைமறைவாக இருப்பவர்கள் பட்டியலும் தயாரிக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றர்.
தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ள கட்சி பேனர்கள், கட்-அவுட்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் சுவர்கள் வேட்பாளர்கள் சுவர் விளம்பரம் செய்தால் அதை அழிக்கும் செலவை அவர்களே ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரி அஜித் தியாஜி இன்று மதுரை வருகிறார். 9ம் தேதி வரை தேர்தல் நடக்கும் தொகுதிகளை பார்வையிடுகிறார். இவரைத் தவிர 2 பார்வையாளர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.