கைதான அதிமுகவினர் விடுதலை
சென்னை:தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுக் கைதான அதிமுகவினர் 11 ஆயிரத்து 350 பேரும் நேற்று மாலை சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தரக்குறைவாக முதல்வர் கருணாநிதி பேசியும், எழுதியும் வருவதாக கூறி அதைக் கண்டித்து 7ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தனர்.
முதல்வரின் கொடும்பாவியும், முரசொலி நாளிதழும் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் அதிமுகவினர் ஈடுபட்டனர். பல பகுதிகளில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதலும் நடந்தது.
இதையடுத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வானூர் இன்ஸ்பெக்டர் கணபதியை உயிரோடு எரிக்க முயன்றதாக கைதான 28 பேரைத் தவிர மற்றவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து காவல்துறை சார்பில் அதிமுகவினர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டதாக சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே ஜாமீனில் வெளியானவர்கள் போக மீதமுள்ள 11,350 பேரும் நேற்று மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications