சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவுஇடது சாரிகள் புதிய நிபந்தனை
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவு தர வேண்டுமானால், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சம்மதிக்க வேண்டும் என இடது சாரிக் கட்சிகள் புதிய நிபந்தனை விதித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவை இடதுசாரிகள் ஏற்க மறுத்துள்ளனர். மாறாக, சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவு தர வேண்டுமானால், லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அவை நிபந்தனை விதித்துள்ளன.
இந்த நிபந்தனையை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் இதுதான் தங்களது நிபந்தனை என்பதை அவர்கள் மறைமுகமாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சிவராஜ் பாட்டீலுக்கு ஆதரவு தர முடியாது, தங்களது கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதேசமயம், முன்னாள் பாஜக முதல்வரும், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான பைரான் சிங் ஷெகாவத்தை சுயேச்சையான வேட்பாளராக நிறுத்தவும் பாஜக கூட்டணி முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications