ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிறது 3வது அணி?
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிக்க ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஜூலை 2ம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ முடிவை அவர்கள் வெளியிடவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அப்துல் கலாமையே போட்டியிட வைக்க 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கடுமையாக முயன்றது. ஆனால் அது பலிக்கவில்லை. கலாம் மீண்டும் போட்டியிட மறுத்து விட்டார்.
இதையடுத்து பாட்டீலை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக பைரான் சிங் ஷெகாவத் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் பிரதீபா பாட்டீல், ஷெகாவத் ஆகிய இருவருக்குமே ஆதரவு தரப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ள 3வது அணி, குடியரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
3வது அணி சார்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என அதிமுகவும், அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியும் யோசனை தெரிவித்தன. ஆனால் இதற்கு பிற கட்சிகளிடையே ஆதரவு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்தே தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை 3வது அணி எடுத்துள்ளதாக தெரிகிறது.
2009ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல்தான் நமக்கு முக்கியம். எனவே நமக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வழி வகுத்து விடக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவுக்கு 3வது அணி வந்துள்ளது.
வருகிற ஜூலை 2ம் தேதி 3வது அணியின் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை அதிகாரப்பூர்வமாக 3வது அணி அறிவிக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications