3வது அணியில் சேர போகும் மார்க்சிஸ்ட் கம்யூ:ஜனாதிபதி தேர்தலுக்கு பின் அதிரடி
பெங்களூர்:ஜெயலலிதா-நாயுடு-முலாயம் சிங் ஆகியோர் உருவாக்கியுள்ள மூன்றாவது அணியில் இணைவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசித்து வருவதாக அக் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத்தின் மனைவியும் கட்சியின் மகளிரணி தலைவியுமான பிருந்தா காரத் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளார்.
பெங்களூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்தரங்கில் பிருந்தா காரத் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
புதியதாக உருவாகியுள்ள 3வது அணி இந்திய அரசியலுக்கு அவசியமானது. இந்த அணி குடியரசு தலைவர் தேர்தலுக்காக மட்டுமல்லாமல் கொள்கை அடிப்படையிலும் அமைய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது 3வது அணியில் இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிக்களுக்கு எதிரணியாக வலுவான ஒரு கட்சி அமைய வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3வது அணியில் இணைவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. குடியரசு தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிகளில் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. பொருளாதார கொள்கையில் இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் விவாதித்தாலும் அவர்களின் போக்கில் மாற்றம் எதுவும் இல்லை.
ஆந்திராவில் கடந்த ஆண்டு சிறு கடன் திட்டத்தால் பல பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சிறு கடன் திட்டத்திற்கு வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கு வட்டியை வசூலிக்கின்றன. சிறு கடன் திட்டத்தில் நிதியமைச்சர் சிதம்பரம் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம்.
வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றுவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். உணவுப் பொருட்கள் விற்பனை தனியார் நிறுவனங்களிடம் அதிக அளவில் முடங்குவதை மத்திய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் பொது மக்களின் நலனுக்காக பாடுபடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களை நக்சலைட்டுகள் என கூறி அடக்குவதை மிகவும் கண்டிக்கதக்கது என்றார் பிருந்தா.












Click it and Unblock the Notifications