உயர்நீதிமன்றத்தில் டி.எஸ்.பி.க்கு வக்கீல்கள் சரமாரி அடி
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த டி.எஸ்.பியை வக்கீல்கள் சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடம் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், வெற்றிவேல். இருவரும் வழக்கறிஞர்கள். இவர்களை சில போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த இரு வழக்கறிஞர்களும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வழக்கறிஞர்களைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கறிஞர்களின் உடல் நலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர்கள் குழுவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் ஆஜராவதற்காக மேட்டூர் டி.எஸ்.பி. அசோக்குமார், கருமலைக்கூடம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் மாலை 4 மணிக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு ஒரு வக்கீல்கள் கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து வேகமாக வந்தது. அவர்கள் போலீஸார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். ஒருவர் தனது ஹெல்மட்டால் டி.எஸ்.பியை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸார் விரைந்து வந்து இரு காவல்துறையினரையும் மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர். தாக்குதல் நடத்திய வக்கீல்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் வக்கீல்கள் தாக்கப்பட்டது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் மிஸ்ரா, பானுமதி ஆகியோரிடம் இந்தக சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். வக்கீல்கள் இதுபோல நடந்து கொள்ளலாமா, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளலாமா என்று கோபத்துடன் கேட்டார் நீதிபதி மிஸ்ரா.












Click it and Unblock the Notifications