மதுரை மேற்கு: காங்கிரஸ் அபார வெற்றிஅதிமுக படுதோல்வி- தேமுதிக பிரமாதம்!
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் 30,826 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு யாரும் எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.
அதே நேரத்தில் விஜய்காந்தின் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிவமுத்துக்குமரன் கிட்டத்தட்ட அதிமுகவுக்கு இணையான வாக்குகளைப் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் சசிராமன் வெறும் 1,308 வாக்குகள் மட்டுமே பெற்று படு கேவலமான தோல்வியை சந்தித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நடந்த முதல் சுற்றிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்து வந்தார். எந்த சுற்றிலும் அவர் பின் தங்கவில்லை.
மாறாக, வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு ஆரம்பத்திலிருந்தே பின்தங்கியிருந்தார்.
ஆனால் யாரும் எதிர்பாராத அளவுக்கு தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமரன் அதிமுகவுக்கு நெருக்கமாக வாக்குகளை அள்ளியபடி வந்து அசத்தினார்.
16வது சுற்றின் இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் 60,785 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வாக்குகள் விவரம்:
காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன்-60,785
அதிமுக வேட்பாளர் ராஜூ- 29,959
தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன்- 21,241
பாஜக சார்பில் போட்டியிட்ட சசிராமன் என்ற சீத்தாராமனுக்கு டெபாசிட் காலியாகிவிட்டது.
அதே போல புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் என்ற சிற்றறசுவுக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை.
இந்த வெற்றியின் மூலம் சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இத் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற சண்முகம் வெறும் 3,467 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார். ஆனால், இப்போது காங்கிரசிடம் அதிமுக 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று பெறும் சரிவைக் கண்டுள்ளது.
அதிமுகவின் பெரும்பாலான வாக்குகளை விஜய்காந்த் இழுத்துவிட்டது தான் இந்த படுகேவலமான தோல்விக்குக் காரணம்.
இத் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இத் தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்)
இதில் 1,17,89575 வாக்குகள் பதிவாயின (75 %) என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன.
வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மெயின் ஹாலில் வாக்கு எண்ணும் பணி நடந்தது.
வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications