முஷாரப்புக்கு பெனசீர் புட்டோ ஆதரவு?
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மீண்டும் அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் வசித்து வருபவருமான பெனசீர் புட்டோ ஆதரவு தெரிவிக்கக் கூடும் என்று பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
முஷாரப் ஆட்சிக்கு வந்த பின்னர் பெனசீர் புட்டோ மற்றும் அவரது கணவர், குடும்பத்தார் மீது சரமாரியாக வழக்குகள் தொடரப்பட்ன. பெனசீர் புட்டோ பாகிஸ்தானுக்குத் திரும்பவே முடியாது என்றும் முஷாரப் கூறி வந்தார்.
![]() |
இந்த நிலையில் பெரும் திருப்பமாக முஷாரப்புக்கு ஆதரவுக் கரம் நீட்ட பெனசீர் முடிவு செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
முஷாரப் மீண்டும் அதிபராக பெனசீர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து விட்டாராம். அதேசமயம், முஷாரப்புக்காக நேரடியாக ஆதரவு தர அவர் விரும்பவில்லை. மாறாக, தனது கட்சியினரைத் தேர்தலில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வைத்து அதன் மூலம் முஷாரப்புக்கு மறைமுகமாக ஆதரவு தர பெனசீர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
![]() |
சமீபத்தில் பெனசீருடன், முஷாரப் தரப்பில் லண்டனில் வைத்து ரகசியப் பேச்சுக்கள் நடந்துள்ளன. அந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே பெனசீர் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
இதற்கு பிரதியுபகாரமாக பெனசீர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் படிப்படியாக வாபஸ் பெற்றுக் கொள்ளப் போகிறாராம் முஷாரப்.
அதேசமயம், பெனசீர் தரப்பிலிருந்து ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து, முஷாரப் மீண்டும் அதிபராவதற்கு இடையூறு செய்ய முயலக் கூடும் என்ற எண்ணமும் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் தலைவர்களிடம் நிலவுகிறது. இதைத் தடுக்க நாடாளுமன்றத்தைக் கலைத்து விட வேண்டும் என்று அவர்கள் முஷாரப்புக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.
ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அனைத்து எதிர்க்கட்சியனரையும் உள்ளடக்கிய அனைத்துக் கட்சி கூட்டமைப்பின் கூட்டம் லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் பெனசீரும் கலந்து கொள்ளக் கூடும் என்று தெரிகிறது.
செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15ம் தேதிக்குள் முஷாரப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. இதற்கு வசதியாக ஜூலை 14ம் தேதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். எனவே இதுதொடர்பான முடிவை விரைவில் முஷாரப் எடுப்பார் என்று தெரிகிறது.
அதேசமயம், மாகாண சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்படாது என்று கூறப்படுகிறது. எனவே பாகிஸ்தானில் நாடாளுமன்றத்திற்குத் தனியாகவும்,சட்டசபைகளுக்குத் தனியாகவும் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.














Click it and Unblock the Notifications