மட்டக்களப்பு: புலிகளிடமிருந்து தொப்பிகலா மீட்புஇலங்கை ராணுவம் அறிவிப்பு
கொழும்பு:இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதியான தொப்பிகலாவை மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அப்பகுதிக்குள் ராணுவம் வெகு தூரத்திற்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிதான் தொப்பிகலா. அடர்ந்த வனப் பகுதியான தொப்பிகலாவை விடுதலைப்புலிகள் தங்கம் வசம் வைத்திருந்தனர்.
இந்தப் பகுதியில் மட்டுமே புலிகள் ஆதிக்கம் இருந்ததால் இதை மீட்க கடந்த சில வாரங்களாக இலங்கை ராணுவம் கடுமையாக முயன்று வந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு தொப்பிகலா பகுதியை ராணுவம் கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தொப்பிகலா பகுதிக்குள் ராணுவம் ஊடுறுவிச் சென்று கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொப்பிகலா அருகே உள்ள நரகமுலா, தரவிக்குலமா ஆகிய பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தரவிக்குலமா பகுதியில்தான் விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தலைமையிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் முக்கியப் பகுதியான தொப்பிகலாவை ராணுவம் கைப்பற்றியுள்ளது, அரசியல், சமூக, ராணுவ ரீதியாக இலங்கை அரசுக்கு பெரும் பலத்தைக் கொடுத்துள்ளதாக பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.
தொப்பிகலா பகுதியில்தான் திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது. சர்வதேச நிறுவனங்களான பிரிமா, டோக்யோ சிமென்ட் ஆகிய நிறுவனங்களும் உள்ளன. மிகச் சிறந்த சுற்றுலா தலமும் கூட. எனவே தொப்பிகலாவைப் பிடித்துள்ளதால் இலங்கை அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொப்பிகலாவைப் பிடித்து விட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த தகவலும் இல்லை.












Click it and Unblock the Notifications