கோவை, நெல்லை, குற்றாலத்தில் நக்சல் வேட்டை
கோவை:
தேனி மாவட்ட மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் சிக்கியதைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான கோவை மற்றும் குற்றாலத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனரா என்று தீவிர வேட்டையில் அதிரடிப் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனப் பகுதியில் பதுங்கியிருந்த 3 நக்சலைட்டுகளை சமீபத்தில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாகி விட்ட 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொறியியல், சட்டக் கல்லூரி மாணவர்களை தங்களது நக்சலைட் இயக்கத்தில் சேர்த்து பெரும் நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த நக்சலைட் இயக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
தப்பி ஓடிய நக்சலைட்டுகள் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக கோவை வனப் பகுதிக்கும், குற்றாலம் மலைப் பகுதிக்குள்ளும் ஊடுறுவியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து கோவை மற்றும் குற்றாலம் வனப் பகுதிகளில் தீவிர வேட்டை தொடங்கியுள்ளது. இந்த இடங்கள் தவிர மேற்குத் தொடர்ச்சி மலை எந்த மாவட்டங்களில் எல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவையில், பெரியநாயக்கன்பாளையம் மலைப் பகுதி மற்றும் வனப் பகுதிகளில் 50 போலீஸார் இரண்டு பிரிவாக பிரிந்து சென்று சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 5 மணி முதல் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர தேடுதல் வேட்டையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
பாலமலை, குருடிமலை, பசுமணி, மாங்குழி, பசுமணிபுதூர், ஆனைக்கட்டி மலை, மேல்முடி ரங்கசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
நெல்லித்துறை, காந்தவயல், தேக்கம்பட்டி, மாந்துரைக்காடு ஆகிய பகுதிகளில் மாறுவேடத்திலும் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல, நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
குறிப்பாக குற்றாலம் மலைப் பகுதியில் தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இங்கு முன்பு அல் உம்மா இயக்கத்தினரின் நடமாட்டம் இருந்தது. இந்த நிலையில் தற்போது தப்பி தலைமறைவாகியுள்ள நக்சலைட்டுகள் குற்றாலம் மலைப் பகுதிக்குள் ஊடுறுவியுள்ளனரா என்பதை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குற்றாலம் தவிர சிவகிரி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியரை ஆகிய வனப் பகுதிகளிலும் தீவிர வேட்டை நடத்தப்பட்டுள்ளது. குற்றாலம் சீசனையொட்டி அங்கு குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகளையும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அருவிகளில் மாறு வேடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு அங்கு குளிக்க வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications