லாட்டரி அதிபர் மார்ட்டினிடம்ரூ 2 கோடி வசூலித்த கேரள சிபிஎம்
திருவனந்தபுரம்:
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் ரூ. 2 கோடி பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான தேசாபிமானிக்கு கட்சி சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் ரூ. 2 கோடி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்கை, ஒழுக்கத்தை உலகுக்குப் போதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்படி ஒரு நிதி வசூலை நடத்தியிருப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இரண்டு கோடி ரூபாய் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேரள காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்ட்டினிடம் நிதி வசூல் செய்த விவகாரம் வெளியில் வந்து விட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து நேற்று கூடி கட்சியின் மாநிலக் கமிட்டிக் கூட்டம் விவாதித்தது.
இந்தக் கூட்டத்தின் இறுதியில், மார்ட்டினிடம் வாங்கிய பணத்தை திரும்பவும் அவரிடமே கொடுத்து விட தீர்மானிக்கப்பட்டது.
2 கோடி ரூபாய் பணம் கொடுத்த மார்ட்டின், ஏராளமான முறைகேடுகளில் சிக்கி தலைமறைவாக உள்ளார். அவரை தமிழக போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications