சென்னை: அரசு பஸ்கள் முந்த முயன்றதில்2 பள்ளி மாணவர்கள் நசுங்கிச் சாவு
சென்னை:சென்னையில் இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றையொன்று முந்த முயன்று அசுரத்தனமாக சென்றதில், படிக்கட்டில் நின்று பயணம் செய்த 2 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை நகரில் சமீபகாலமாக சாதாரண வகைப் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. மாறாக அதிக கட்டணத்துடன் கூடிய ப்ளூ லைன், எல்லோ லைன் பேருந்துகள் அதிக அளவில் ஓடத் தொடங்கியுள்ளன.
இந்த வகை பேருந்துகளில் பள்ளி மணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் கிடைக்கிற பேருந்துகளில் தொற்றிக் கொண்டு பள்ளிகளுக்கு ஓட வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர்.
அலுவலக நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், கடும் கூட்டத்துக்கு மத்தியில் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு பள்ளிகளுக்குச் சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை இதுபோல படிக்கட்டில் தொற்றிக் கொண்டு பயணித்த இரு பள்ளி மாணவர்களின் விதியை, பொறுப்பற்ற வேகத்தில் சென்ற இரு அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் மிகவும் பரிதாபமான முறையில் முடித்து வைத்து அந்த இரு மாணவர்களின் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளனர்.
இன்று காலை வடபழனியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு ஒரு டவுன் பஸ் கிளம்பியது. அதேபோல கோயம்பேட்டிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு இன்னொரு பஸ் வந்தது.
இரு பேருந்துகளும் உதயம் தியேட்டர் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது, யார் முந்திச் செல்வது என்பதில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும் போட்டி ஏற்பட்டது. படு வேகமாக இருவரும் உதயம் தியேட்டர் சந்திப்பில் வளைந்தனர்.
அவர்களின் ராட்சத வேகத்தைப் பார்த்து அந்தப் பகுதியே பயந்து போனது. இரு பேருந்துகளும் படுவேகமாக வளைந்தபோது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த இரு மாணவர்கள் பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர்.
இதில் ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனான். இன்னொரு மாணவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தான்.
இரு ஓட்டுநர்களின் பொறுப்பற்ற டிரைவிங்கால், இரு அப்பாவி பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு விரைந்து நடவடிககை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கண்டிப்பாக அறிவுறுத்த வேண்டும். ப்ளூ லைன் மற்றும் எல்லோ லைன் பேருந்துகளிலும் இலவச பஸ் பாஸ்களுடன் வரும் மாணவர்ளை அனுமதிக்க வேண்டும் என்று அப்பாவி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications