பிளஸ் ஒன் டாக்டர் திலீபன் சரண்டர்:சிடியை நொறுக்கிய தந்தை!!
திருச்சி:மணப்பாறையில் பெண்ணுக்கு சிசேரியன் செய்த டாக்டர் தம்பதியின் மகனான பிளஸ் ஒன் டாக்டர் திலீபன் இன்று திருச்சி சிறுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மணப்பாறையில் க்ளினிக் வைத்து நடத்தி வந்த டாக்டர் தம்பதிகள் முருகேசன்-காந்திமதியின் மகன் திலீபன் ராஜ். கின்னஸ் சாதனைக்காக தன் மகனை வைத்து டாக்டர் முருகேசன் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்தார்.
இதை வீடியோவாக சி.டி.யில் பதிவு செய்து, அதை மணப்பாறையில் நடந்த டாக்டர்கள் கருத்தரங்கில் போட்டுக் காட்டி சிக்கலில் மாட்டினார்.
![]() |
பிளஸ் ஒன் மாணவன் அறுவை சிகிச்சை செய்த இந்த விவகாரத்தில் டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டனர். ஆனால், சிகிச்சையை செய்த இவர்களது மகன் திலீபன் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வந்தனர்.
அதே நேரத்தில், சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் முருகேசனையும் காந்திமதியையும் போலீசார் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர்.
மணப்பாறை காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை கூடுதல் எஸ்.பி. சாந்தி தலைமையில் நள்ளிரவு வரை போலீஸார் விசாரணை செய்தனர். மீண்டும் காலையும் விசாரணை தொடர்ந்தது.
இந்த விசாரணையின்போது முருகேசன் தன்னிடம் சி.டி. எதுவும் கிடையாது என்றார். அப்போது போலீஸார் ஐ.எம்.ஏ. மருத்துவக் கழகத்தை சேர்ந்தவர்கள் சி.டி.யை பார்த்தது குறித்து கேட்டபோது, சர்ச்சைக்குரிய அந்த சி.டி.யை நான் உடைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் மருத்துவமனையிலும் வைத்தும் சுமார் 2 மணி நேரம் இவர்களிடம் விசாரணை நடத்திய பின் டாக்டர் தம்பதியை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திலீபன் சரண்:
இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த திலீபன் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தார். ஆனால், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துவிட்டது.
![]() |
இதையடுத்து திலீபன் இன்று திருச்சி சிறுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதற்கிடையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி டாக்டர் தம்பதி தாக்கல் செய்த மனுவை திருச்சி அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்கக்கனி தள்ளுபடி செய்துவிட்டார்.














Click it and Unblock the Notifications