15 எம்பிக்கள் தாவ திட்டம்-ராஜபக்சேவுக்கு நெருக்கடி
கொழும்பு:இலங்கையை ஆளும் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த 15 எம்.பிக்கள் அதிலிருந்து விலகி விட்டனர். எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர்கள் இணையத் திட்டமிட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்கள் சரமாரியாக அதிலிருந்து விலகி ராஜபக்சேவின் ஆளும் கட்சியில் இணைந்தனர். இவர்களை ராஜபக்சேதான் இழுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த 15 எம்.பிக்கள் அதிலிருந்து விலகி விட்டனர். அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் இணையவுள்ளனர்.
இதனால் ராஜபக்சே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆளும் கூட்டணிக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எதிர்கட்சியின் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திசஅக்த நாயகா கூறுகையில்,
ஆளும் கட்சியிலிருந்து 15 எம்.பி.க்கள் எங்கள் கட்சியில் சேர உறுதியாக உள்ளனர். இது சம்பந்தமாக 17 எம்.பி.க்கள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் 15 பேர் எங்கள் கட்சியில் சேர்வதில் உறுதியாக உள்ளனர்.
வரும் 26-ம் தேதி கொழும்பில் பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதன் பின்பு இலங்கை அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என்றார்.
ஆளுங்கட்சி எம்.பிக்களின் திடீர் தாவலால் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
அகதிகள் வருகை அதிகரிப்பு:
இந் நிலையில் இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மீண்டும் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது.
புலிகளை தாக்குவதாகக் கூறி தலைமன்னார், திரிகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர்.
வவுனியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 பேர் பைபர் கிளாஸ் படகு மூலம் தனுஷ்கோடியில் உள்ள நம்பிப்பாடு கடற்கரை வந்தனர். மேலும் 3 ஆண்கள் அகதிகளாக கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் போலீஸார் விசாரித்த பின் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அகதிகள் கூறுகையில், எங்கள் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. தமிழ் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி காட்டில் உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். படகில் இந்தியா வர ரூ.50,000 கொடுத்தோம் என்றனர்.












Click it and Unblock the Notifications