சென்னை, மதுரை ரயில் நிலையங்களைதகர்க்க நக்சலைட்டுகள் திட்டம்?!
பெரியகுளம்:தேனி மாவட்ட மலைப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருந்த இடத்தில் போலீஸார் நடத்திய சோதனையில், சென்னை, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் ரயில் நிலையங்களைத் தகர்க்க தீட்டப்பட்ட சதித் திட்டம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை கரட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மூன்று நக்சலைட்டுகள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நக்சலைட்டுகள் மூன்று பேரும் பெரும் நக்சலைட் கும்பலுடன் இணைந்தவர்கள் என்பதும் மாணவர்களை ஒன்று திரட்டி பெரும் தாக்குதல் திட்டத்தை வகுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து இந்த மலைப் பகுதியில் தீவிர சோதனை நடந்து வருகிறது. வீரப்பன் வேட்டையில் முன்பு ஈடுபடுத்தப்பட்ட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சோத்துப்பாறை, அகமலை, சின்னூர், பெரியூர், கும்பக்கரை அருவி மலைப் பகுதி உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதில் சென்னை, மதுரை, ராமேஸ்வரம், நெல்லை ஆகிய ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களின் வரைபடங்கள் கிடைத்தன. அங்குள்ள முட்புதர்களில் இந்த வரைபடங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த ரயில் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்க்க நக்சலைட்டுகள் திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அப்பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்தும் போலீஸார் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications