கடலில் விழுந்து மீண்ட அமெரிக்க வீரர்கள்
சென்னை: சென்னைக்கு வந்துள்ள நிமிட்ஸ் போர்க் கப்பலின் ஐந்து வீரர்கள், குட்டி கப்பலில் சென்றபோது ராட்சத அலையில்சிக்கி கடலில் மூழ்கினர். பின்னர் பத்திரமாக அவர்கள் மீட்கப்பட்டனர்.
அமெரிக்காவின் அணு சக்தி போர்க் கப்பலான நிமிட்ஸ் சென்னைக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலில் வந்துள்ள 4500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்னை மற்றும் சுற்றுப்புற சுற்றுலா மையங்களில் மையமிட்டு சுற்றிப் பார்த்து வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள கானத்தூர் ரெட்டிகுப்பம் பகுதிக்கு நேற்று அமெரிக்க வீரர், வீராங்கனைகள் சென்று அங்குள்ள மக்களை சந்தித்தனர். அவர்களுடன் ஜாலியாக கலந்துரையாடிய அவர்கள் கிராமத்து மக்களோடு சேர்ந்து குடம் சுமந்து தண்ணீர் பிடித்து சந்தோஷமாக பொழுதைக் கழித்தனர்.
அங்குள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினர். அவர்களைத் தூக்கி வைத்துக் கொஞ்சினர்.
அமெரிக்க வீராங்கனைகளின் கலரில் மயங்கிய கிராமத்துப் பெண்கள் படு உற்சாகத்தோடு அவர்களுக்கு முத்தம் கொடுத்தும், தங்களுக்குத் தெரிந்த இங்கிலிபீஷில் பேசியும் சந்தோஷப்பட்டனர்.
இதுதவிர முதியோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஒரு பிரிவினர் தங்களது சிட்டி விசிட்டை முடித்துக் கொண்டு கப்பலுக்குத் திரும்பினர். சென்னை துறைமுகத்திலிருந்து குட்டிக் கப்பல் மூலம் நிமிட்ஸ் கப்பலுக்குச் சென்றனர்.
கப்பலை குட்டிக் கப்பல் நெருங்கியபோது, ராட்சத அலை வீசியது. இதனால் அமெரிக்க வீரர்கள் 5 பேர் இருந்த அந்த குட்டிக் கப்பல் தடுமாறி கடலில் விழுந்தது. இதையடுத்து அந்த ஐந்து வீரர்களும் டக்கென்று கடலில் குதித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் அமெரிக்க படை வீரர்கள் மற்றும் போலீஸார் அவர்களை மற்றொரு படகில் சென்று மீட்டனர்.
இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் சூடேஸ்வரன் கூறுகையில், சிறிய கப்பல் கடலில் கவிழ்ந்த விஷயத்தை அமெரிக்க வீரர்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். இது அடிக்கடி நடைபெறும் நிகழ்வுதான் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் மூழ்கிய குட்டிக் கப்பலை தாங்களே மீட்டுக் கொள்வதாகவும் அவர்கள் கூறி விட்டனர்.
நிமிட்ஸ் கப்பல் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. அந்தக் கப்பலைச் சுற்றிலும் 30 சிறிய கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்தில், அமெரிக்க வீரர்கள் செல்லும் வழியில் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. கப்பலை சுற்றி அதிரடிப்படை வீரர்கள் மற்றும் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications