200 டாலரில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வரலாம்
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான நிறுவனமான டைகர் ஏர்வேஸ் நிறுவனம், அக்டோபர் 28ம் தேதி முதல் இந்தியாவுக்கு சேவையை தொங்கவுள்ளது.
டைகர் ஏர்வேஸ் நிறுவனம் மிகவும் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை நடத்தும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவுக்கும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது.
அக்டோபர் 28ம் தேதி முதல் இந்தியாவுக்கான தனது சேவையை டைகர் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்குகிறது. அதன்படி, வரிகள் உள்பட 200 சிங்கப்பூர் டாலர் மட்டும் கட்டணமாக செலுத்தி இந்தியாவுக்கு பயணிக்க முடியும்.
சிங்கப்பூருக்கு அதிக அளவிலான இந்தியப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க் ஏர் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
அதேபோல சிங்கப்பூர் பயணிகளை இந்தியாவுக்கு இழுக்கும் முயற்சியில் ஏர் இந்தியா, இந்தியன், ஜெட் ஏர்வேஸ், ஏர் சஹாரா ஆகிய நிறுவனங்கள் முயன்று கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது டைகர் ஏர்வேஸ் நிறுவனம் சேருகிறது.
சென்னை, கொல்கத்தா, கோவா, கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட 6 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை மேற்கொள்ளும்.
அக்டோபர் 28ம் தேதி சென்னைக்கு தனது முதல் பயணத்தை டைகர் ஏர்வேஸ் விமானம் மேற்கொள்கிறது. அக்டோபர் 30ம் தேதி கொச்சிக்கான சேவை தொடங்கப்படுகிறது.
சென்னைக்கு வாரம் நான்கு முறையும், கொச்சிக்கு வாரம் மூன்று முறையும் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கும் படிப்படியாக விமான சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.
தென் கிழக்கு ஆசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 20 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.
சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்தியா மிகவும் பிடித்தமான நாடாக உருவாகி வருவதால் சிங்கப்பூரைச் சேர்ந்த பல விமான சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமான சேவையை மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications