எங்கள் ஆதரவு உங்களுக்கு தேவை:திமுகவுக்கு ராமதாஸ் பதிலடி
சென்னை:எங்கள் செயல்பாடுகள் திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்தும், சென்னை மகளிர் பேரணி குறித்தும் பாமக நிறுவனர் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் தர ராமதாசுக்கும் அவருக்கும் இடையே கடந்த 4 நாட்களாக அறிக்கைப் போர் நடந்து வந்தது.
இந் நிலையில் ராமதாசின் அறிக்கைய தனக்கு மனவேதனையை அளிப்பதாக முதல்வர் கருணாநிதி அறிக்கையை வெளியிட்டார். மேலும் ராமதாசின் செயல்களால் கூட்டணி உடையும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந் நிலையில் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறோம், இது 5 வருடம் தொடர்வதில் எந்த மாற்றமும் இல்லை.
தமிழக அரசுக்கு நாங்கள் எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்க மாட்டோம். எங்களுடைய செயல்பாடுகளும் அவ்வாறு அமையாது.
எங்கள் பிரச்சனைகள் குறித்து கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தால் சொல்லலாம். ஆனால் அவ்வாறான கூட்டங்கள் நடத்தப்படததால் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க முடியவில்லை.
கூட்டுறவு தேர்தலை குறித்து எந்த ஆலோசனை நடத்தப்படவில்லை. இவ்வாறு இருந்தால் எப்படி தேர்தலை சந்திப்பது.
தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து எளிய மக்களுக்கும் தெரியும், இது குறித்து நேரடியாக விசாரித்தலே தெரிய வரும். ஒருவர் மட்டும் பேசுவதால் இந்த பிரச்சனையை வெளியே கொண்டு வர முடியாது.
திமுகவுடன் நட்பு முறையில் கூட்டணி அமைத்துள்ளதால் அரசை புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என அவசியமில்லை. விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம், பாலாறு போன்றவை மக்கள் பிரச்சனைகளில் என்பதால் எங்கள் கருத்துகளை கூறினோம்.
திமுக அரசு மெஜாரிட்டி இல்லை. எங்கள் ஆதரவு அவர்களுக்கு தேவை என்பதால் தொடர்ந்து நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications