தமிழகத்திற்கு தண்ணீரா?-கர்நாடகத்தில் போராட்டம் ஆரம்பம்
மைசூர்:கடும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பி வருவதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தனது அணைகளுக்கு பெருமளவில் நீர் வந்து கொண்டிருப்பதால் அணைகளின் பாதுகாப்பைக் கருதி கர்நாடக அரசு, காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.
மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மைசூர் மற்றும் மாண்டியாவில் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அம் மாநில துணை முதல்வரின் கார் மீது கல்வீச்சும் நடத்தினர்.
கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மைசூரை சுற்றி பெய்த கன மழையால், அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
அணையின் நீர் மட்டம் கணிசமான அளவுக்கு உயர்ந்துவிட்டதையடுத்து அணை திறந்துவிடப்பட்டது. இந்த நீர் மேட்டூருக்கு வந்து கொண்டுள்ளது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணராஜா தொகுதி எம்.எல்.ஏ. சோமசேகர் தலைமையில் சுமார் 200-க்கும் அதிகமானவர்கள் சேர்ந்து அணையின் பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா செய்தனர்.
அப்போது அவர்கள் கே.ஆர்.எஸ். அணையின் உயரம் 128.40 அடியாகும். அணை முழுவதுமாக நிரம்புவதற்குள் ஏன் தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என கேட்டனர்.
மேலும் நீரை வெளியேற்றுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அணை நிரம்பும் வரையில் தண்ணீரை வெளியேறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர்.
இதே போல் மாண்டியா மாவட்டத்தில் சில விவசாய சங்கத்தை சேர்ந்தவர்களும், ஒரு சில கன்னட அமைப்புகளும் சேர்ந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இவர்கள், கெஜ்ஜரலே தேசிய நெடுஞ்சாலையில் சென்று மறியலில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சென்ற துணை முதல்ருவரும் பாஜக தலைவருமான எதியூரப்பாவின் கார் மீது கல் வீசினர்.
இதையடுத்து எதியூரப்பா காரை விட்டு இறங்கி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக தண்ணீரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியும் அளித்துள்ளார்.
மேட்டூருக்கு கிடுகிடு நீர் வரத்து:
இதற்கிடையே கர்நாடகத்திலிருந்து நீர் திறந்து விடப்பட்டிருப்பதால், மேட்டூர் அணைக்கு அபரிமிதமான நீர் வந்து கொண்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையில் தற்போது 75.600 அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த நீர் இருப்பு 120 அடியாகும்.
அணைக்கு விநாடிக்கு 19 ஆயிரத்து 300 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றனர்.
இதே நிலை நீடித்தால் அணையின் நீர் இருப்பு திருப்திகரமான முறையில் உயரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தால் விரைவில் பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படக் கூடும் என்பதால் விவசாயிகளிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது.
அப்ப தமிழ்நாடு












Click it and Unblock the Notifications