டாக்டர் ஹனீப்பின் காவல் நீட்டிப்பு
கான்பெரா:லண்டன் மற்றும் கிளாஸ்கோ விமான நிலைய தற்கொலைப் படைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப்பின் போலீஸ் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் லண்டன் கார் வெடிகுண்டுகள் தொடர்பாக இந்திய டாக்டர்கள் ஹனீப், சபீல் அகமது உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஹனீப் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரது போலீஸ் காவலை மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்க குவீன்ஸ்லாந்து நீதிமன்றத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் மனு செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த குவீன்ஸ்லாந்து நீதிபதி கூடுதலாக 96 மணி நேரத்திற்கு ஹனீப்பை விசாரிக்க அனுமதித்தார். இதன் மூலம் வருகிற திங்கள்கிழமை மாலை வரை ஹனீப்பை போலீஸார் விசாரிக்க அவகாசம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் ஹனீப்பின் லேப்டாப் கம்ப்யூட்டரிலிருந்து பல்வேறு தகவல்களை போலீஸார் திரட்டி வருகின்றனர். அவரது சிம் கார்டில் பதிவாகியுள்ள எண்களையும் திரட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்புடன் வந்து மோதியது கபீல் அகமது என்று தெரிய வந்துள்ளது. இவர் இந்திய டாக்டர் சபீல் அகமதுவின் அண்ணன் ஆவார். இவரும் டாக்டர்தான். இவர்தான் ஜீப்பை ஓட்டி வந்துள்ளார். உடன் வந்தவர் ஈராக்கைச் சேர்ந்த டாக்டர் பிலால் அப்துல்லா.
கிளாஸ்கோவில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிலாலும், கபீலும் விட்டுச் சென்ற கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதுகுறித்தும் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications