ராமேஸ்வரத்தில் இன்று உமாபாரதி போராட்டம்
மதுரை:சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து பாரதீய ஜனசக்தி தலைவர் உமாபாரதி தலைமையில் இன்று ராமேஸ்வரத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது.
ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது, சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரி வரும் உமாபாரதி, இன்று ராமேஸ்வரத்தில் சத்யாகிரகப் போராட்டத்தை நடத்தவுள்ளார்.
இதற்காக ராமேஸ்வரம் செல்லும் வழியில் நேற்று மதுரைக்கு வந்த உமாபாரதி அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில், மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது. இதனால் இந்துக்களின் மனம் புண்படும்.
சேது சமுத்திரத் திட்ட பணிகளால் ஏராளமான மீனவர்கள் வேலையிழந்து ஆதரவற்று நிற்கின்றனர்.
ராமர் பாலம் இந்துக்களின் வரலாற்று சின்னமாக திகழ்கிறது. இந்தப் பாலம் அழிவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். பழமையான வரலாற்று சின்னத்தை அழித்து விட்டு, இந்த அரசு ஒரு திட்டத்தை நிறைவேற்றுகிறது என்றால் அதை கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இது சம்பந்தமாக புவியியல் ஆய்வு மையத்திற்கு சென்று ராமர் பாலம் பற்றிய தகவல்களை சேகரித்தார். அவர் சேகரித்த தகவல்களை அறிக்கையாக தயாரித்து, அனைத்து மக்களும் காணும் வகையில் தரச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றார் உமாபாரதி.












Click it and Unblock the Notifications