பலே, தாஜ் .. இந்தியாவில் உற்சாகம்
டெல்லி:
உலகின் புதிய ஏழு அதிசயங்களில் தாஜ் மஹால் மீண்டும் இடம் பிடித்திருப்பதை உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
காதலின் சின்னமாக இந்தியர்களால் கருதப்படும் தாஜ்மஹால், உலக அதிசயமாவதில் எந்த சந்தேகமும் இந்தியர்களுக்கு இருந்ததில்லை. இருப்பினும் ஏதோ ஒரு படபடப்புடன்(ஷாஜகான் கூட இவ்வளவு படபடப்புடன் இருந்திருக்க மாட்டார் - இந்த சலவைக் கல் மாளிகையை படைத்தபோது) இருந்தன இந்தியர்களின் உள்ளங்கள்.கட்டடக் கலை ஆர்வலர்களுக்கும், காதலர்களுக்கும் இனம் புரியாத பரவசத்தை இன்றளவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாஜ், மீண்டும் உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பிடித்திருப்பது இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நேற்று நள்ளிரவில் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் முடிவைத் தெரிந்து கொள்ள பெரும் திரளானோர் கூடி ஆவலுடன் காத்திருந்தனர்.
தாஜ்மஹால் உலக அதிசயமாக அறிவிக்கப்பட்டபோது கூடியிருந்தவர்கள் வா, தாஜ்! என்று உற்சாககக் கூக்குரலிட்டனர்.
தாஜ்மஹாலின் சிறப்பை எடுத்துக் கூறி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஓரமாக நிரந்தரமாக இடம் பிடித்து விட்ட பேரதிசயம் தாஜ்.
ரவீந்திரநாத் தாகூர் தாஜ்மஹால் குறித்துக் கூறுகையில், காலத்தின் கன்னத்தில் பிரகாசமாக துளிர்த்து நிற்கும் கண்ணீர்த் துளி என்று வர்ணித்துள்ளார்.
தாஜ் - உருவான கதை:
டெல்லி அருகே, ஆக்ராவில் யமுனை நதிக் கரையில் அமைதியாக காட்சி அளிக்கும் தாஜ்மஹாலுக்குப் பின் பெரும் உணர்ச்சிக் கதை அடங்கியுள்ளது.
முகாலயா சக்கரவர்த்தி ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டியதுதான் தாஜ்மஹால். 1632ம் ஆண்டு தாஜ்மஹாலை கட்டும் பணி தொடங்கியது. 1648ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
தாஜ் மஹாலை வடிவமைத்தவர் யார் என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் உஸ்தாத் அகமது லஹாரி என்பவர்தான் தாஜ்மஹாலை வடிவமைத்திருக்க வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
முகலாய கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக தாஜ் மஹால் திகழ்கிறது. பெர்ஷிய, துருக்கிய, இந்திய, இஸ்லாமிய கட்டடக் கலைகளின் கலவையாக தாஜ் மிளிர்கிறது.
தாஜ் மஹாலின் வெள்ளை நிற கோபுரங்கள் அந்த நினைவுச் சின்னத்திற்குத் தனி அழகைக் கொடுக்கின்றன. யுனெஸ்கோ அமைப்பால் கடந்த 1983ம் ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது தாஜ்.
புதிய ஏழு அதிசயங்களில் மட்டுமல்ல, என்றுமே உலகத்தின் பேரதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications