உசிலம்பட்டி: திமுக-கம்யூ தொண்டர்கள் மோதல்தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்க முயற்சி
உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் கூட்டுறவு சங்கத் தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்க முயற்சி நடந்தது.
உசிலம்பட்டியை அடுத்த நத்தபடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு தொடக்க வங்கிக்கு இன்று மூன்றாவது கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. மனு தாக்கல் செய்ய திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வந்தனர்.
தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணன் திமுகவினரிடம் மட்டும் மனுக்களை பெற்றார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆத்திரமடைந்து, தேர்தல் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்த முயற்சித்தனர். அங்கு நின்றிருந்த போலீஸார் இதை தடுத்து நிறுத்தினர்.
திமுகவுக்கு எதிராகவும், தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனுக்கு எதிராகவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷமிட்டனர். பதிலுக்கு திமுகவினரும் கோஷமிட்டதால் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபடும் சூழல் உருவானது.
இதே போல் உசிலம்பட்டிக்கு அருகே உள்ள உத்தப்ப நாயக்கனூரிலும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காலை 11 மணி வரை தேர்தல் அதிகாரி மகாதேவன் அங்கு வராததால், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.