மாற்றிய அதிகாரிகளை மீண்டும் நியமிப்பதா?மதுரையில் ஆர்ப்பாட்டம்-ஜெ. அறிவிப்பு
சென்னை:மதுரை மேற்கு சட்டசபை இடைத் தேர்தலின்போது மதுரையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் அதே பணியிடத்தில் நியமிப்பதை கண்டித்து மதுரையில் வருகிற 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் நடந்தபோது திமுக அரசின் அராஜகம் அத்துமீறியது. இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது.
சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய காரணத்திற்காகவும், திமுக அரசுக்கு சாதகமாக செயல்பட்டதற்காகவும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த நியாயமான நடவடிக்கையை அனைவரும் வரவேற்றனர். தேர்தல் நடந்து சில நாட்களே ஆன நிலையில், தற்போது மாற்றப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மீண்டும் அதே இடத்தில் பணியாற்றிட திமுக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த செயல் ஜனநாயக விரோத செயலாகும். இதன் மூலம் திமுக அரசின் ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் மேற்படி அதிகாரிகள் துணை போவதோடு, மதுரையில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சரின் மகன் மு.க.அழகிரியின் அதிகார துஷ்பிரயோகம் மேலும் அதிகரித்து விடும்.
எனவே மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் பணிபுரிய ஆணையிட்டுள்ள திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அதிமுக மாநகர மாவட்ட கழகம் சார்பில் வருகிற 16ம் தேதி காலை 10 மணிக்கு மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநகர மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா, வேட்பாளர் செல்லூர் ராஜு ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications