செக்ஸூக்காக செக் மோசடி:கன்னட பிரசாத் கூட்டாளி கைது
சென்னை:விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காக நாடு முழுவதும் வங்கிகளில் போலி செக் கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விபச்சார மாமா கன்னட பிரசாத்தின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகன்மோகன் என்ற அந்த நபருடன் விமல்ராஜ் என்பவனும் சிக்கியுள்ளான்.சமீபத்தில் ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் முகலிவாக்கம் மற்றும் மையிலாப்பூர் கிளை மானேஜர் ஸ்ரீதரும், கதீட்ரல் ரோட்டில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியின் மேலாளர் ஆரியோர் சென்னை குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தனர்.
ஸ்ரீதர் கொடுத்த புகாரில், கடந்த நவம்பர் 15-ம் தேதி ஆனந்தராஜ் மற்றும் அன்பழகன் என்ற இருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சத்துக்கான மூன்று காசோலைகள் டெபாஸிட் செய்யப்பட்டன. அதற்குரிய பணத்தை அதே தேதியிலும், மறு நாளும் மொத்தமாக எடுத்து விட்டார்கள்.
அந்த காசோலை மும்பையிலுள்ள வாடிக்கையாளருடையது. ஆனால், அந்த வாடிக்கையாளர் மற்றவர்களுக்கு கொடுத்த செக்கை இந்த 2 பேரும் அதிக தொகையை நிரப்பி பணத்தை எடுத்ததுள்ளனர் என்று தனது புகாரில் கூறியிருந்தார்.
கதீட்ரல் ரோடு எச்.எஸ்.பி.சி. வங்கி மேலாளரும் இதே போல் புகார் கூறியிருந்தார்.
இந்த மோசடி குறித்து உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் தர்மராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இது தொடர்பாக அம்பத்தூரைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவர் முதலில் சிக்கினார். பிசினஸ்மேன் என்று கூறிக் கொண்டு பல வங்கிகளில் பல பெயர்களில் அக்கவுண்ட் வைத்து ரூ.55 லட்சம் வரை இவர் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இவரிடம் விசாரித்தபோது இலங்கை தமிழரான ஜெகன்மோகன் என்பவரும் இதில் சம்பந்தபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜெகன்மோகனுக்கு மும்பையைச் சேர்ந்த மோசடி கும்பலோடு தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
ஜெகன்மோகன் கொடுத்த வாக்குமூலத்தில்,
மும்பையைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் தொழிலதிபர்கள் யாருக்காவது கொடுத்த செக்கை மோசடி கும்பலிடம் தருவார்கள். அவர்கள் கூடுதலான தொகையை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். நான் அதை விமல்ராஜூடன் சேர்ந்து பணமாக மாற்றுவேன். எவ்வளவுத் தொகையாக இருந்தாலும் எங்கள் இருவருக்கும் தலா 10 சதவீதம் போக மீதி தொகை 80 சதவீதத்தை மும்பை கும்பலும், அங்குள்ள வங்கி ஊழியர்களும் பிரித்துக் கொள்வார்கள்.
நான் மோசடி செய்த தொகையை விபச்சார அழகிகளுக்காக செலவு செய்தேன். இதில் எனக்கு கன்னட பிரசாத்தோடு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் இருந்த விபச்சார அழகி குஷ்யுமுடன் (கன்னட பிரசாத்தின் மனைவிகளில் ஒருவர்) ஜாலியாக இருக்க தண்ணீராக செலவு செய்தேன் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளான்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் மூளையாக இருந்து செயல்பட்டுள்ள மும்பை கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். பிடிபட்டுள்ள ஜெகன்மோகன் மீது ஏற்கனவே கிரடிட் கார்டு மோசடி வழக்குகளும், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பியதில் முறைகேடு போன்ற வழக்குகளும் உள்ளன.
மும்பை கும்பல் ஹைதராபாத், பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் ஆள் வைத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. ஜெகன்மோகனை மத்திய குற்றபிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications