திமுகவுடன் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை:சேலம் பாமக அறிவிப்பு!!!!
சேலம்:திமுகவுடன் இனி எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று சேலம் மாவட்ட பாமக அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வேட்பு மனு தாக்கலின் போது திமுகவினருக்கும், பாமகவினருக்கும் இடையே பெரும் மோதல் எழுந்தது. இதில் பாமகவினர் கடுமையாக தாக்கப்பட்டனர்.
இதையடுத்து திமுக, பாமக இடையிலான மோதல் பெரிதாகி தற்போது ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று பாமகவினர் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போயுள்ளது.
பாமகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் காவேரி (எடப்பாடி), தமிழரசு (ஓமலூர்), கண்ணையன் (தாரமங்கலம்) மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரும், சேலம் மாவட்ட பாமக துணை பொதுச் செயலாளருமான சண்முகம் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து இதை தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார். எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார். எங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கூட்டுறவு சங்கத் தேர்தல் என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் இதில் கூட கூட்டணிக் கட்சியினர் குறிப்பாக பாமகவினர் வந்து விடக் கூடாது என்று அவர் திட்டமிட்டு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது.
ஓமலூர் எம்.எல்.ஏ தமிழரசுவை கொலை செய்யும் நோக்கத்துடன் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோர் ஏவி விட்ட குண்டர்கள் சோடா பாட்டில்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்க முயன்றுள்ளனர்.
இனிமேல் பாமகவுக்கும், திமுகவுக்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. குண்டர்களால் நடத்தப்படும் சேலம் மாவட்ட திமுக மக்கள் ஆதரவை இழந்து விட்டது.
அமைச்சர் சொல்வதற்கேற்பத்தான் மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையர், காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆடுகின்றனர். திமுகவினரால் தாக்கப்பட்டது நாங்கள் என்றாலும் அவர்கள் மீது வழக்கு தொடராமல் எங்கள் மீதே வழக்குப் போட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications