திருந்தாத ரயில்வே: அரக்கோணம், திருவள்ளூரில்வழக்கம்போல் இன்றும் ரயில் மறியல்!!
திருவள்ளூர்:மின்சார ரயில்களின் நேரத்தை மாற்றி அமைக்கக் கோரி இருமுறை போராட்டம் நடத்தியும் ரயில்வே கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த திருவள்ளூர், அரக்கோணம் ரயில் பயணிகள் இன்று மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை சென்டிரல் நிலையத்திலிருந்து அரக்கோணம் வரையிலான மின்சார ரயில்களின் நேரத்தை சமீபத்தில் தெற்கு ரயில்வே மாற்றி அமைத்தது. இதனால், திருவள்ளூர், அரக்கோணம் போன்ற ஊர்களிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வருவோர் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் பெரும் பாதிப்படைந்தனர்.
இதையடுத்து ரயில்வே நேரத்தை மீண்டும் பழைய நேரத்திற்கே மாற்றக் கோரி இருமுறை ரயில் மறியல் போராட்டம் நடத்தி ரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். ஆனால் இந்தப் போராட்டங்களை ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் இன்று மீண்டும் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இன்று காலை 7 மணிக்கு அரக்கோணம் அருகே புளியமங்கலம் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் குதித்தனர்.
இதேபோல திருவள்ளூர் அருகே திருநின்றவூர், கடம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் பயணிகள் மறியலில் குதித்தனர். இதனால் மின்சார ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுதவிர பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தாங்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் ரயில்வே தொடர்ந்து மெத்தனமாக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று பயணிகள் கடும் ஆவேசத்துடன் கூறினர். பழையபடி நேரத்தை மாற்றி அமைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் பயணிகள் எச்சரித்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக சென்னையிலிருந்து செல்ல வேண்டிய பிருந்தாவன், கோவை எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications