நிரம்பியது கிருஷ்ணராஜசாகர்-அணை திறப்பு:மேட்டூரும் விரைவில் நிரம்பும்!
மேட்டூர்:கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி விட்டதால் பெருமளவு வரும் உபரி நீர் அப்படியே தமிழகத்தின் மேட்டூர் அணைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன.
முக்கியமான, பெரிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் அதிக அளவில் நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று மாலை கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியது.
மேட்டூர் அணைக்கு இங்கிருந்துதான் தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதால் கிருஷ்ணராஜசாகர் நிரம்பிய செய்தி தமிழகத்திற்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
நேற்று மாலை அணை நிரம்பியதைத் தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் நாளை காலையில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியைத் தொட்டுள்ள நிலையில் வருகிற 25ம் தேதி அணை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் கிருஷ்ணராஜசாகரிலிருந்து பெருமளவு நீர் திறந்து விடப்பட்டிருப்பதால், முன்கூட்டியே அணை திறக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
மேலும் கிருஷ்ணராஜசாகரிலிருந்து தொடர்ந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டால், மேட்டூர் அணை விரைவில் நிரம்பக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன என்று பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.