அல்கொய்தா பிடியில் லால் மசூதி!
இஸ்லாமாபாத்தில் சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து ராணுவத்தால் மீட்கப்பட்ட லால் மசூதியை அல் கொய்தா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத் நகரின் மையப் பகுதியில் உள்ளது லால் மசூதி. சிவப்பு மசூதி எனவும் இது அழைக்கப்படுகிறது.
இந்த மசூதில் உள்ள மதரசாவில் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அவர்களை உடனடியாக சரணடையுமாறு அதிபர் முஷாரப் உத்தரவிட்டார்.
ஆனால் அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து மசூதியை ராணுவம் முற்றுகையிட்டது. சமரசப் பேச்சுக்கள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மசூதியின் நிர்வாகியான புரட்சிகர மதகுரு அப்துல் ரஷீத் காஸியும் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இந்த மசூதியை அல் கொய்தா அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. பின் லேடனுக்கு அடுத்த அல் கொய்தா தலைவரான அய்மான் அல் ஜவாஹிரிதான் லால் மசூதியில் உள்ள தீவிரவாதிகளை, பாகிஸ்தான் படையுடன் மோதுமாறு உத்தரவிட்டதாக லண்டன் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அல் ஜவாஹிரிதான் இந்த மசூதியை நடத்தி வந்ததாகவும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இத்தகவலால் பாகிஸ்தான் அரசு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தலைநகருக்குள்ளேயே அல் கொய்தா அமைப்பு வலுவாக காலூன்றியிருப்பது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அபாய அறிவிப்பாக முஷாரப் அரசு கருதுகிறது.
எனவே தீவிரவாதிகள் மீதான பிடியை இறுக்கவும் முஷாரப் அரசு தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications