என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்:மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
நெய்வேலி:நெய்வேலி அனல்மின் கழகத்தில் பணியாற்றி வரும் 13 ஆயிரம் தற்காலிக ஊழியர்களும் இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
நெய்வேலி அனல் மின் கழகத்தில் 13 ஆயிரம் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு போனஸ் தொகையில் பிடித்தம் செய்வதாக நிர்வாகம் அறிவிக்கவே, அதை எதிர்த்து டிசம்பர் மாதம் போராட்டம் நடத்தினர்.
பின்னர் பிடித்த முடிவை அணல் மின் கழக நிர்வாகம் கைவிட்டது. இதையடுத்து அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் இந்த மாதம் முதல் போனஸ் தொகையில் பிடித்தம் செய்யப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து 13 ஆயிரம் ஊழியர்களும் இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போனஸ் பிடித்தத்தை எதிர்த்து மட்டுமல்லாது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது. அசம்பாவித நிகழ்வுகளைத் தடுக்க அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications