விரைவில் தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட்
டெல்லி:நாட்டில் உள்ள எல்லா தபால் நிலையங்களிலும், ரயில் டிக்கெட்கள் பெறும் வசதி விரைவில் அமல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
ரயில்வேத் துறையில் வியாபாரத்தை பெருக்குவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது லாலு பேசுகையில்,
வங்கிகளின் ஏடிஎம் மூலமாக பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகள் பெறவும் 6,000 ரயில்வே நிலையங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து பயணிகள் ரயில்களிலும் 24 பெட்டிகள் இணைக்கப்படும். அதற்கேற்றவாறு அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் பிளாட்பாரங்களின் நீளமும் விரிவுபடுத்தப்படும்.
ரயில்வே நிர்வாகம் சிறப்பான வளர்ச்சியடைவதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சரக்கு ரயில்கள் செல்வதற்கு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் தனி பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாய விளை பொருள்களை விற்பதற்கு 7,000 ரயில்வே நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.
21 ரயில்வே நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றி அமைக்கப்படும்.
வாடிக்கையாளர்களை நண்பர்களாக பாவிக்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் ரயில்வே சார்பாக எடுக்கப்படும்.
ரயில்வே அமைச்சகம் நிதி பற்றாக்குறை இல்லாமல் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications