யோபு கூட்டாளியின் 2வது மனைவி கைது:ரூ. 1 கோடி சொத்து, 20 லட்சம் பணம் பறிமுதல்
சென்னை:மோசடி பிஷப் யோபு சரவணனின் கூட்டாளியான ராமநாதனின் மனைவி ஜெமி பாத்திமாவை போலீஸார் கைது செய்து அவர் பெயரில் வாங்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் ரூ. 20 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டித் தருகிறேன் என்று கூறி தமிழகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைக் கறந்து மோசடி செய்ததாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலி பிஷப் யோபு சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். கூட்டாளிகளில் ஒருவரான ராமநாதன் என்பவரின் 2வது மனைவியான ஜெமி பாத்திமாவை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராமநாதன் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால் இவரது சொந்த ஊர் திசையன்விளை ஆகும். யோபுவின் முக்கியமான கூட்டாளி இவர். கிட்டத்தட்ட யோபுவுக்கு வலது கரம் போல செயல்பட்டு வந்தார்.
![]() |
இவருக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் தனலட்சுமி. இதுதவிர தன்னுடைய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்த ஜெமி பாத்திமாவையும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்.
ஜெமி பாத்திமாவை மடிப்பாக்கத்தை அடுத்துள்ள கோவிலம்பாக்கத்தில் குடி வைத்திருந்தார் ராமநாதன். யோபு மோசடி மூலம் கறந்த பெருமளவு பணத்தை ராமநாதனிடம்தான் கொடுத்து வைத்தார். ராமநாதன் அந்தப் பணத்தைக் கொண்டு ஜெமி பெயரில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டார்.
இந்த நிலையில் யோபுவின் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி ஜெமி பாத்திமாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரது பெயரில் வாங்கிப் போடப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள், ரூ. 20 லட்சம் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதனுக்கும், தனக்கும் ஏற்பட்ட காதல், பின்னர் நடந்த கல்யாணம், அவரது மோசடிக்குத் துணை போனது குறித்து ஜெமி பாத்திமா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அவரது வாக்குமூல விவரம்:
நான் பிறந்தது மடிப்பாக்கம். சிறு வயது முதலே எனது குடும்பம் கொடும் வறுமையில் வாடி வந்தது. நான் வளர வளர வறுமையும் கூடிக் கொண்டேதான் போனது.
பத்தாவது வரை நான் படித்துள்ளேன். பத்தாவது முடித்து விட்டு வேலைக்கு முயற்சித்து வந்தேன். அப்போதுதான் 1992ம் ஆண்டு தி.நகரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு பெண் தேவை என்று விளம்பரம் பார்த்தேன். அங்கு போய் நான் வேலை கேட்டேன்.
அப்போது எனக்கு வயது 18. அந்த ரியல் எஸ்டேட்டை ராமநாதன் நடத்தி வந்தார். அவரைப் பார்த்ததுமே எனக்கு காதல் ஏற்பட்டு விட்டது. பிறகு அவர் என்னை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் 2004ம் ஆண்டு யோபு சரவணனின் நட்பு ராமநாதனுக்குக் கிடைத்தது. ரியல் எஸ்டேட் தொழிலில் ராமநாதன் இருந்ததால், தனக்கு துணையாக அவரை வைத்துக் கொண்டார் யோபு.
யோபு, ராமநாதன் நட்பு உருவான பின்னர் எனக்கு நிறைய வசதி கூடியது. என்னிடம் ராமநாதன் அடிக்கடி நிறையப் பணத்தைக் கொண்டு வந்து கொடுப்பார். அந்தப் பணத்தையெல்லாம் நான் நிலங்களாக வாங்கிப் போட்டேன்.
இந்த நிலையில் மீரான் என்பவருடன் எனக்குத் திருமணம் நடந்தது. ஆனால் அது நிலைக்கவில்லை. மீரானைப் பிரிந்து வந்து விட்டேன். பிறகு ராமநாதனுடன் மீண்டும் சேர்ந்து கொண்டேன்.
எனக்கு 40 பவுன் நகைகளை வாங்கிக் கொடுத்தார் ராமநாதன். யோபு கைதாகி, ராமநாதனும், நானும் தலைமறைவான பின்னர் அந்த நகைகளை வைத்துத்தான் இருவரும் வாழ்க்கை நடத்தி வந்தோம்.
கோவை, மும்பை என பல இடங்களில் தலைமறைவாக இருந்து வந்தோம். ராமநாதன் போலீஸாரிடம் சிக்கிய பின்னர் நான் மணலி உள்ளிட்ட சில இடங்களில் பதுங்கியிருந்தேன்.
கோவிலம்பாக்கத்தில் வசித்து வரும் எனது தாய் வீட்டுக்கு வந்தபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஜெமி பாத்திமா.
இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
ராமநாதனின் முதல் மனைவியான தனலட்சுமி திருச்செந்தூர் அருகே வசித்து வருகிறார். அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.













Click it and Unblock the Notifications