தமிழக எம்.எல்.ஏக்களுக்கு ஓட்டு போட பயிற்சி
சென்னை:குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் நேற்று மாலை கூடி ஆலோசித்தனர். அவர்களிடம் எப்படி ஓட்டுப் போட வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது.
திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் திமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மட்டுமல்லாது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏக்கள் ரவிக்குமார், செல்வம் ஆகிேயாரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. பின்னர் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசுகையில், 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாது, தமிழகத்தைச் சேர்ந்த இரு இந்திய கம்யூனிஸ்ட் எம்.பிக்களும் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றார்.
இதேபோல காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
யசோதா எம்.எல்.ஏவைத் தவிர மற்ற 34 பேரும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
பின்னர் வீரப்ப மொய்லி கூறுகையில், இந்தத் தேர்தலின் மூலம் இந்தியக் கலாச்சாரம் வெளிப்படப் போகிறது, நாட்டின் உயர்ந்த பதவியை முதன் முதலாக ஒரு பெண் அலங்கரிக்கப் போகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications