மேட்டூர் நிரம்பியது-11 மாவட்டங்களில் உஷார் நிலை
மேட்டூர்:மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை இன்று பிற்பகலில் எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகள் முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், கபிணி அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபிணியிலிருந்து நேற்று மாலை முதல் விநாடிக்கு 1 லட்சத்து 19 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அபரிமிதமான தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 1259 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.க் கொண்டுள்ளது.
இதனால் காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள தஞ்சை, திருவாரூர், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு 2 வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த மாவட்டங்களில் காவிரி கரையோரப் பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
மேட்டூர் அணை இந்த ஆண்டு நிரம்புவது இதுவே முதல் முறை என்பதாலும், தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications