மேட்டூர் அணை தூணில் நீர்க் கசிவு!
மேட்டூர்:மேட்டூர் அணையின் மதகுப் பகுதியில் தூணில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் அதிகபட்சம் 120 அடிக்குத் தான் நீரை தேக்க முடியும். ஆனால், கடந்த 20ம் தேதி அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவையும் தாண்டியது.
இதையடுத்து 16 மதகுகளின் வழியாக அதிகப்படியான உபரி நீர் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 40,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால் அணையின் பாலத்தின் மீது சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந் நிலையில் 16வது மதகின் (ஷட்டர்) அடிப்பகுதியிலிருந்து உபரி நீர் பீய்ச்சிக் கொண்டு வெளியேற ஆரம்பித்துள்ளது.
இந்த ஷட்டரை தாங்கி நிற்கும் கல்தூணின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல்கள் வழியாகவும் தண்ணீர் பீறிக் கொண்டு வெளியேறி வருகிறது.
இதனால் 80 வருடங்களுக்கு மேலான இந்த அணை முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.