விடுதலை ஆனார் மோனிகா பேடி
ஹைதராபாத்:போலி பாஸ்போர்ட் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தாதா அபு சலீமின் காதலியும், நடிகையுமான மோனிகா பேடி இன்று ஆந்திர சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
அபு சலீமுடன் தலைமறை வாழ்க்கை வாழ்ந்து வந்த மோனிகா பேடி கடந்த 2002ம் ஆண்டு போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சலீமுடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்கள் இருவரையும் சிபிஐ அதிகாரிகள் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர்.இந்தியா கொண்டு வரப்பட்ட மோனிகா பேடி மீது போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக போபால் மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் அவர் மீது இரு வழக்குகள் தொடரப்பட்டன.
ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மோனிகா பேடிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மோனிகா பேடி அப்பீல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்தது.
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மோனிகா. இந்த நிலையில், போபால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரியிருந்தார் மோனிகா பேடி. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து ஜூலை 18ம் தேதி மீண்டும் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மோனிகா பேடி.
இந்த நிலையில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார் மோனிகா பேடி. தனது பாஸ்போர்ட்டை மோனிகா பேடி ஒப்படைக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் தனது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டதாக மோனிகா பேடி தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த சிபிஐ நீதிமன்றம் மோனிகாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மோனிகா. அவரது வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மோனிகா பேடியை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று காலை ஹைதராபாத் மகளிர் சிறையிலிருந்து மோனிகா பேடி விடுதலை செய்யப்பட்டார். அவரை தந்தை பிரேம்குமார் பேடி, உறவினர் புருஷோத்தம் பேடி ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
விடுதலைக்குப் பின்னர் மீண்டும் நடிக்கப் போவதாக ஏற்கனவே மோனிகா பேடி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.