தமிழகத்தில் மீண்டும் கட்டாய ஹெல்மெட்
சென்னை:தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உட்பட 6 மாநகராட்சிகளிலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் ஹெல்மெட் விற்பனை சூடு பறந்தது. மாநகராட்சி அல்லாத பகுதிகளில் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் டூ-வீலர்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்லும் நிலைமை ஏற்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது காவல் துறை அபராதம் விதித்தது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு வந்தது.
இந் நிலையில் தான் மதுரையில் இடைத் தேர்தல் வந்தது. அந்த சூழலில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிப்பதில் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்றார்.
இதையடுத்து போலீசாரும் ஹெல்மட் அணியாதவர்களை கண்டுகொள்ளாமல் விட்டனர்.
இந் நிலையில் இப்போது சென்னையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களிடம் போலீசார் அபராதம் விதிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார் கூறியதாவது,
சென்னை நகரில் ஹெல்மெட் போடாமல் டூ-வீலர் ஓட்டுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் வசூல் செய்யப்பட்டதற்காக அவர்களுக்கு நோட்டீஸ் (ரசீது) கொடுக்கப்படும். அவர்களுக்கு கொடுக்கப்படும் ரசீதில் ஹெல்மெட் அணியாமல் வந்த குற்றத்திற்காக அபராதம் வசூல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருக்காது.
ஏனென்றால் இவை ஹெல்மெட் சட்டம் கொண்டு வருவதற்கு முன்னால் அச்சடிக்கப்பட்டதாகும். இனிமேல் அபராதத் தொகைக்கான நோட்டீஸில் இந்த பகுதி குறிப்பிடப்பட்டிருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications