83 வயது முதியவரை கத்தியால் குத்திநகை கொள்ளை-முகமூடி திருடன் அட்டகாசம்
சென்னை:சென்னையில் 83 வயது முதியவரை கத்தியால் குத்தி நகைகள் கொள்ளயடிக்கப்பட்டுள்ளன. சில காலமாக அடங்கியிருந்த முகமூடிக் கொள்ளையர்கள் மீண்டும் தலை காட்டியுள்ளதால் சென்னை மக்கள் பீதியமடைந்துள்ளனர்.
ராயப்பேட்டை டீச்சர்ஸ் காலனியில் வசிப்பவர் மூர்த்தி (83). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் குடும்பத்தோடு அமெரிக்காவில் வசிக்கிறார். மூர்த்தி தனது மனைவி சரோஜாவுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் மூர்த்தியும், சரோஜாவும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் உள்ள இன்னொரு படுக்கை அறையில், சத்தம் கேட்டுள்ளது.
அதைக் கேட்ட மூர்த்தியும், சரோஜாவும் எழுந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். முகத்தை துணியால் மறைத்து தனது தோள் பையில், பொருட்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த மூர்த்தி சத்தம் போட்டவாறே அந்த நபரைப் பிடிக்க முயன்றார். இதைக் கண்டு மிரண்ட முகமூடி கொள்ளையன் கத்தியை காட்டி மிரட்டியபடி, ஒழுங்காக கதவை திறந்து விடு. இல்லையெனில் கத்தியால் இருவரையும் குத்தி கொல்லப்போவதாக கூறியுள்ளார்.
பின்னர் திடீரென மூர்த்தியை கத்தியால் கையில் குத்திவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து மூர்த்தியும், சரோஜாவும் பீரோவை போய் பார்த்தனர். அப்போது அதிலிருந்த 40 பவுன் தங்க நகைகளும், ரூ.4 ஆயிரம் பணமும் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து மூர்த்தி ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மோப்பநாயுடன் வந்தனர். ஆனால் மோப்ப நாய் கொள்ளை நடைபெற்ற வீட்டிலிருந்து தெருவரை ஓடிச்சென்று நின்று விட்டது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கொள்ளையடித்த நபர் தனி ஆளாக வந்திருக்க முடியாது. இருவர் அல்லது மூன்று பேர் சேர்ந்துதான் இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
வீட்டில் இவர்கள் இருவரும் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு நன்கு அறிமுகமான நபர் தான் இந்த செயலை செய்திருக்க முடியும். இவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் இருப்பதை அறிந்து கொண்டு யாரோ இந்த செயலை செய்துள்ளனர்.
கொள்ளையன் உள்ளே இருப்பது தெரிந்தவுடன் இவர்கள் வெளியில் வந்து கதவை தாழ்ப்பாள் போட்டிருந்தால் ஈஸியாக பிடித்திருக்கலாம். மயிரிழையில் தப்பிவிட்டான். முகமூடி கொள்ளையனை நாங்கள் எளிதாக பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் தான் வேளச்சேரியில் மனோதத்துவ நிபுணர், அவரின் மனைவி ஆகியோரை கட்டிபோட்டு கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நேரமான இரவு 8.30-9.00 மணிக்கு நடந்துள்ளது.
வேளச்சேரியில் நடந்த கொலை,கொள்ளை வழக்கில் இன்னும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னொரு முகமூடிக் கொள்ளை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications